இந்திய மத்திய அரசு சொல்லும் எதனையும் பொன் வாக்காக எடுத்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் நேற்று தூத்துக்குடியில் வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கு உச்ச புகழாரம் சூட்டியுள்ளார்.
இதொடர்பாக கருணாநதி கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார்.
அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா?
இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி?
தூத்துக்குடி விழாவில் அந்த தூயவர் பேசியது வருமாறு:
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.
தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்த பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல விடுதலைப் புலிகள் உதவ வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் வடக்கு பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவ குழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.
அடுத்து அரசியல் தீர்வாக இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந் தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த அதிகார பகிர்வு இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழ் மக்களுக்கு இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதிகார பகிர்வு இருக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்”.
உடன்பிறப்பே, பிரணாப் இப்படிப்பேசியது மட்டு மல்ல, டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியின் கருத்தும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
இலங்கைத் தமிழர்களை வாழ வைப்பதற்கும் அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலை நாட்டுவதற்கும், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும் எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும் பலன் கிடைத்தது என்பது போல இந்தியப் பேரரசின் போர் நிறுத்த வலியுறுத்தல், எனக்கு மருத்துவ சிகிச்சை வெற்றியைப் போன்ற மன ஆறுதலை அளிக்கிறது.மத்திய அரசுடன் தீர்மானங்கள் மூலமாகவும் சந்திப்புகள் மூலமாகவும் மகஜர்கள் மூலமாகவும் நேரடியாகவும் ஒல்லும் வகையெல்லாம் தொடர்பு கொண்டு செய்த முயற்சிகளினால் இன்று. அனல் மின் நிலைய விழா பிரணாப் பேச்சு.
அவரது அறிக்கை இவை அனைத்தும் நம் நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது.
ஆனால் இந்த நேரத்தில் தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கி,அரசியலில் நாணயத்தை தூசாக்கி வாழும் சில வக்கிற மூளையினர் தாங்கள் வகித்த பொறுப்புகளுக்கு தகுதியற்றோர் என்று காட்டிக்கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு நாகரிகக்கேடாக நடந்து கொண்டு நமது மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங்களுக்கும் தீயிட்டுப்பார்த்து திருப்தி அடைந்திருக்கின்றனர்.
யார் அவர்கள் சிங்களவத் தலைமையாளர் ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைக்கு நியாய வாதம் எடுத்துரைத்த ஜெயலலிதாவின் பாதார விந்தங்களே தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்துக் கொண்டிருப்பவர்கள் அந்த அம்மா ஜெயாவின் அத்யந்த சீடர்கள், இலங்கைப் பகைவர்களை விட்டு விட்டு இந்தியத்தலைவர்களின் படங்களுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள் என்றால் தேசப்பாது காப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?
முடியாது, முடியாது, முடியவே முடியாது! இலங்கைத்தமிழர்களுக்கு அதிகாரமும் அங்கே அமைதியும் கிடைத்து அவர்கள் வாழ்ந்திட நாம் தமிழ் உணர்வோடு பணி புரிகிறோம்.
அதில் கிடைக்கும் வெற்றிக்காகக்காத்து நிற் கிறோம். மத்திய அரசுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் இப்போதே கேட்கிறோம்.
ஆம் இந்த உலகில் பெரிய தேசமாம் இந்திய நாடு கேட்கிறது. பிராணாப் முகர்ஜி கேட்டுள்ளார். இந்திய அரசு கேட்கிறது. நாமும் கேட்கிறோம். போரை நிறுத்து என்று மத்திய அரசிடமிருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம்.
அதுவும் மார்ச் முதல் நாள் மருத்துவ மனையிலிருந்து நான் மட்டுமல்ல என் பழைய நண்பர் வாஜ்பாயும் நலம் பெற்று வெளிவரும் நாள் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடத்தும் போரை இந்தியாவே நடத்துவதாக ஆதரபூர்வமான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையைப் புரிந்துகொள்ளாமல் தமிழக முதல்வர் இருக்கின்றாரா அல்லது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வெற்றிகளைப் பெறுவதற்கும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றாரா என்ற கேள்வியே தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.