சென்னை: 'நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழர்களின் நலத்திற்கும், உத்தரவாதத்திற்கும் அளிக்கக் கூடிய பொறுப்பு மத்திய ஆட்சியின் கரங்களில் தான் இருக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் இடுகாடாகவும், சுடுகாடாகவும் மாறி வருகின்றன. அங்கு குழந்தைக் குட்டிகளோடு குடும்பம் குடும்பமாய் ஒப்பாரி குரல் தான் கேட்கிறது. மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்தியப் பேரரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம், இந்த ஆண்டு ஜனவரியில் தமிழக சட்டசபையில் முதல்வரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்தியப் பேரரசு அசைந்து கொடுக்கவில்லை. 'பேசியிருக்கிறோம், சொல்லியிருக்கிறோம், வேண்டுகோள் விடுத்திருக்கிறோம், வற்புறுத்தியிருக்கிறோம்' என்று சொல்லி, காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார்களே தவிர, இலங்கையில் போர் நிறுத்தப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த அவகாசத்தில் இலங்கையில் தமிழனம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக இனவெறி பிடித்த சிங்கள ராணுவத் தளபதி கொக்கரிப்பு செய்திருக்கிறார். இதனால், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக செத்துமடியும் சூழல் உருவாகும்.
இந்த கொடுமை நடந்தேறினால், உலகில் இதுவரை நடந்திராத இனப் படுகொலை, இலங்கையில் அரங்கேறிவிடும். எனவே, நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கு உத்தரவாதம் அளிக்ககூடிய பொறுப்பு மத்திய ஆட்சியின் கரங்களில் தான் இருக்கிறது. அந்த கரங்களைப் பிடித்துக் கொண்டு கேட்கிறோம்.
இலங்கையில் சீரழியும், செத்து மடியும் எங்கள் தமிழ் ஜாதியை காப்பாற்றுங்கள். மத்திய அரசின் செவிகளில் விழும்படி உரக்க குரல் கொடுங்கள்; அதற்காக முழு பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கும், அதற்கு தலைமையேற்று நடத்துகின்ற முதல்வருக்கும் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.