தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையம் ரூ.4,900 கோடி செலவில் அமைகிறது. தலா 500 மெகாவாட் திறன் உடைய 2 பிரிவுகள் கொண்ட அனல் மின் நிலையமாக இது நிறுவப்படுகிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் மத்திய நிலக்கரிதுறை அமைச்சர் சந்தோஷ் பக்ரூடியா, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, மணிசங்கர் அய்யர், ஆ.ராசா, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கேவாசன், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், ஆர்.வேலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், எஸ்.ரகுபதி, கே.வேங்கடபதி, ராதிகா செல்வி, நாராயணசாமி, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.இதற்கிடையே தூத்துக்குடிக்கு வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புகொடி காட்டப்போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதை வலியுறுத்தாமலும், தமிழர்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்றும் தமிழ் இன உணர்வாளர்களும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார்.
வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர்.
இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.