ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 10, 2009

சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் - வைகோ

சிறிலங்காவுக்கு ஜப்பான் அளித்து வரும் உதவிகளை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டின் பொருட்களை புறக்கணிப்பர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் அரசு உதவி செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதுவரிடம் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவும், இந்தியா அளித்து வரும் இராணுவ உதவி உள்ளிட்ட அனைத்துவிதமான உதவிகளையும் நிறுத்த வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதுவர், பிரித்தானியா துணை தூதுவர் ஆகியோரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, மருத்துவர் இராமதாஸ் ஆகியோர் சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதுவர் கசுவோ மினோகேவாவை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு ஆகியோரும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஜப்பான் துணைத் தூதுவரிடம் 30 நிமிடத்துக்கும் மேலாக விவாதித்தனர்.

சந்திப்பு முடிந்த வெளியே வந்த பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜப்பான் துணை தூதுவரிடம் விண்ணப்பம் கொடுத்தோம். இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து அவரிடம் விரிவாக எடுத்துச் சொன்னோம். போர் நிறுத்தம் ஏற்பட உதவி செய்ய வேண்டிய கடமை ஜப்பானுக்கு உண்டு.

இலங்கைக்கு அதிக அளவில் நிதியுதவி செய்யும் வெளிநாடு ஜப்பான். இலங்கை பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்த உதவிகளை ஜப்பான் செய்கிறது.

ஆனால், ஜப்பான் கொடுக்கும் நிதியுதவிகளை சிறிலங்கா, ஆயுதங்களை வாங்கி குவித்து தமிழ் இனப்படுகொலை செய்து வருகிறது. இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி ஜப்பானுக்கு துணை நின்றார்.

எனவே, ஜப்பான் அரசு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உதவி செய்ய வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசு மறுத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் அனைத்து விதமான உதவிகளையும் ஜப்பான் நிறுத்த வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.




பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவுக்கு ஜப்பான் அதிக நிதியுதவி செய்து வருகிறது. அந்த நிதியைக்கொண்டு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி தமிழர்களை படுகொலை செய்து வருகிறது. இலங்கையில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட ஜப்பான் ஆர்வமாக உள்ளது.

போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற 10 கோடி தமிழர்களின் வேண்டுகோளை ஜப்பான் துணைத் தூதுவரிடம் தெரிவித்தோம். தமிழர் கலாசாரம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு குறித்து அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கு ஜப்பான் அளித்து வரும் உதவிகளை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டின் ஆட்டோ மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் ஒரு கருத்தையும் அதனால் ஜப்பானுக்கு ஏற்படும் வர்த்தக இழப்புகளை புள்ளி விவரங்களுடன் விளக்கினோம் என்றார் மருத்துவர் இராமதாஸ்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண நோர்வே நாடு முயற்சி எடுத்தபோது அதற்கான பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் உதவியாக இருந்தது. இலங்கையில் போர் மறுவாழ்வு பணிகளுக்கு ஜப்பான் அதிக நிதியுதவி செய்தது.

ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் நடத்தப்பட்ட குண்டு வீச்சை காட்டிலும் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் குண்டுகளை வீசி படுகொலை நிகழ்த்தி வருகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இராஜாங்க ரீதியில் சிறிலங்காவுக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார் வைகோ

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.